<div dir="auto">திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள பூவனூர் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் வயது 3. இவர் வளரும் தமிழகம் கட்சியின் மண்டல இளைஞரணி செயலாளராக உள்ளார். இவர் மீது பல்வேறு கொலை உள்ளிட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் திருவாரூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றில் ஆஜராவதற்காக பூவனூர் ராஜ்குமார் அவரது வழக்கறிஞர் உள்ளிட்ட ஐந்து பேர் இன்று காலை வந்துள்ளனர்.</div>
<div dir="auto"> </div>
<div dir="auto">அதனைத் தொடர்ந்து நீடாமலத்தில் உள்ள பூவனூருக்கு செல்வதற்கு முன்பு தனது வழக்கறிஞரை கமலாபுரத்தில் விடுவதற்காக காரில் 5 பேரும் கமலாபுரம் நோக்கி சென்றுள்ளனர். அப்போது கமலாபுரத்திற்கு அருகே மன்னார்குடியில் இருந்து திருவாரூர் நோக்கி அதி வேகத்தில் வந்த ஸ்கார்பியோ கார் இவர்கள் வந்த கார் மீது மோதி விபத்தை ஏற்படுத்தி உள்ளது.</div>
<div dir="auto"> </div>
<div dir="auto">அதில் பின்பக்கம் அமர்ந்திருப்பவர்கள் டோர் லாக் ஆனதால் வெளியே வர முடியவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், ஸ்கார்பியோ காரில் இருந்து இறங்கிய எட்டு பேர் கொண்ட மர்ம கும்பல் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் பூவனூர் ராஜ்குமாரை நோக்கி வந்துள்ளனர். ராஜ்குமார் அவர்களிடமிருந்து தப்பிப்பதற்காக ஒரு வீட்டிற்குள் நுழைவதற்காக ஓடும் போது துரத்திச் சென்று அவர்கள் கழுத்து, கை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சரமாரியாக அவரை வெட்டி உள்ளனர். இதில் பூவனூர் ராஜ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.</div>
<div dir="auto"> </div>
<div dir="auto">இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வெள்ளத்துரை உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.மேலும் உடலை கைப்பற்றி திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்காக மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது எனவும் மாவட்டம் முழுவதும் வாகன சோதனை நடத்தப்பட்டு வருவதாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.</div>
<div dir="auto"> </div>
<div dir="auto">கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு நீடாமங்கலம் கடைத் தெருவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் நடேச தமிழார்வன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இதில் முக்கிய குற்றவாளியான ராஜ்குமார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளிவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே முன் விரோதம் காரணமாக இந்த படுகொலை செய்யப்பட்டதா என்கிற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</div>
<div dir="auto"> </div>
<div dir="auto">மேலும் பூவனூர் ராஜ்குமாரின் உடல் வைக்கப்பட்டுள்ள திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வளரும் தமிழகம் கட்சியை சேர்ந்த பலர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து வளரும் தமிழகம் கட்சியினர் திருவாரூரில் இருந்து தஞ்சாவூர் செல்லும் சாலையில் விளமல் என்கிற இடத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் உண்மை குற்றவாளியை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி அவர்கள் முழக்கமிட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.</div>
<div dir="auto"> </div>