தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை அனுஷ்கா ஷெட்டி. பாகுபலி படம் மூலமாக இந்திய அளவில் கவனம் ஈர்த்த நடிகையாக இருந்தவர், 2018ல் கடைசியாக பாகமதி என்ற படத்தில் நடித்தார். அதன்பின் நடிப்புக்கு முழுக்குபோட்டுவிட்டார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு பேட்டி ஒன்றை அளித்துள்ளார் அனுஷ்கா. அதில், “எனக்கு சிரிப்பு நோய் உள்ளது. அதாவது எப்போதும் சிரித்துக்கொண்டே இருப்பது. சிரிப்பதெல்லாம் ஒரு நோயா என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் உண்மையில் எனக்கு அந்த நோய் உள்ளது. ஒருமுறை நான் சிரிக்க ஆரம்பித்தால், குறைந்தது 20 நிமிடங்கள் வரை சிரித்துக் கொண்டே இருப்பேன்.
காமெடி காட்சிகளைப் பார்க்கும்போதும், அதை படமாக்கும்போதும் நான் தரையில் விழுந்து சிரித்துள்ளேன். இந்த நோயால் காமெடி காட்சிகளைப் படமாக்கும்போதும் எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கும். சிரிப்பை அடக்க முடியாமல் சில சமயங்களில், படப்பிடிப்புக்கு இடைவேளைவிட்டு போய்விடுவேன். சிரிப்பை அடக்கியப் பிறகே மீண்டும் வந்து நடிப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.