சென்னை: ‘வீட்டிற்கு வந்து நான்கு, ஐந்து முறை காலிங் பெல் அடித்தும் திறக்கவில்லை. அவரது நெற்றியில் காயம் இருந்தது” என மறைந்த பாடகர் வாணி ஜெயராம் வீட்டில் பணிபுரியும் பெண் மலர்க்கொடி தெரிவித்தார்.
பிரபல பின்னணி பாடகர் வாணி ஜெயராம் இன்று காலமானார். 78 வயதான அவர் படுக்கை அறையில் கீழே விழுந்திருந்ததாகவும், நெற்றியில் அடிப்பட்டிருந்ததாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில், அவரது வீட்டில் பணிபுரிந்து வரும் மலர்க்கொடி கூறும்போது, “நான் எப்போதும் காலை 10.15 மணிக்கு வீட்டிற்கு வருவேன். அப்படித்தான் இன்றும் 10.45 மணி அளவில் வீட்டுக்கு வந்த காலிங்பெல் அடித்தேன்.
நான்கு, ஐந்து முறை பெல் அடித்தும் கதவை திறக்கவில்லை. அப்போது எனக்கு சந்தேகம் வந்ததது. பின்னர் போன் செய்தேன் எடுக்கவில்லை. என் கணவரிடம் தொலைபேசியில் அழைக்கச் சொன்னேன். அவரும் ஐந்து முறை முயற்சித்தும் தொலைபேசி அழைப்பு எடுக்கப்படவில்லை. கீழ் வீட்டுக்காரரிடம் சென்னோம். பிறகு, காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தோம்.
உள்ளே சென்று பார்த்தபோது அவர் படுக்கை அறையில் கீழே விழுந்து கிடந்தார். அவரது நெற்றியில் அடிப்பட்டிருந்தது. நான் 10 வருடங்களாக இங்கே பணி செய்து வருகிறேன். அவருக்கு உடல்நிலை நன்றாகத்தான் இருந்தது. எந்தப் பிரச்சினையுமில்லை. அவர் என் தாயைப் போல. நாங்கள் அம்மா – மகள் போல பழகுவோம்” என்றார் மலர்க்கொடி. | வாசிக்க > பிரபல பின்னணி பாடகர் வாணி ஜெயராம் மறைவு