Rishabh Pant Accident: இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்டின் உடல்நிலை குறித்து அவரது தாயாரிடம் பிரதமர் மோடியிடம் கேட்டறிந்துள்ளார்.
ரிஷப்பண்ட் விபத்து:
இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் சென்றுகொண்டு இருந்த கார் திடீரென அவரது கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தானது உத்தரகாண்ட் அடுத்த ரூர்க்கியின் குருகுல் நர்சன் பகுதியில் இன்று காலை நடந்தது. இதையடுத்து, அக்கம்பக்கத்தினர் உடனடியாக விபத்தில் சிக்கிய பண்டை மீட்டு, 108 க்கு போன் செய்து பண்டை மருத்துவமனையில் அனுமதித்தனர். அதன்பின்னர் ரிஷப் பண்ட் மருத்துவமனையில் இருந்து டேராடூன் மேக்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அவருக்கு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அவர் விரைவில் உடல்நலம் பெற வேண்டி பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
பிரதமர் பிரார்த்தனை:
இதுதொடர்பாக, பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், கிரிக்கெட் வீரர் ரிஷப்பண்ட் விபத்தில் சிக்கியிருப்பது வேதனை அளிக்கிறது. அவர் நல்ல ஆரோக்கியத்துடன் நலம் பெற நான் பிரார்த்திக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
Distressed by the accident of famous cricketer Rishabh Pant. I pray for his good well being and well-being. @RishabhPant17
— Narendra Modi (@narendramodi) December 30, 2022
விபத்தில் தலையில் பலமாக 2 வெட்டுக்காயங்கள் ஏற்பட்டுள்ளது. மேலும், அவரது முதுகிலும் சிராய்ப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது அவரது உடல்நிலை சீராக இருந்தாலும் அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இன்று காலை பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவால் காலமானார். பிரதமர் மோடி தனது தாய்க்கு செய்ய வேண்டிய இறுதிக்கடமைகளை நேரில் சென்று செய்தார்.
இந்த சோகமான சூழலிலும் மாலையில் மத்திய அரசின் திட்டத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். தற்போது, ரிஷப்பண்ட் மீண்டு வர வேண்டும் என்று ட்விட்டரில் பிரார்த்திருப்பதாக கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லியில் இருந்து தனது வீட்டிற்கு ரிஷப்பண்ட் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து அரங்கேறியுள்ளது. ரிஷப்பண்டிற்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ரிஷப்பண்ட் தாயாருக்கு ஆறுதல் கூறிய பிரதமர்:
இன்று பிரதமர் நரேந்திர மோடியின் தாயர் வயது மூப்பு காரணமாக இறந்த நிலையிலும், ரிஷ்ப் பண்ட்க்கு ஏற்பட்ட விபத்து குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் வருத்தம் தெரிவித்த நிலையில், ரிஷ்ப் பண்ட்டின் தாயாரிடமும் அவரது உடல் நிலை குறித்து விசாரித்துள்ளார்.